சென்னை, செப்.23: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த 2016ல் மக்கள் நல கூட்டணி சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இந்த வழக்கின் குற்றச்சாட்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரை நேரில் ஆஜராக நேற்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ, திருமாவளவன், வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் நீதிபதி முன்பு மறுத்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பின் சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.