மதுராந்தகம்: தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதில், கிராம வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கு கடந்த 15ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.
இதனை தொடர்ந்து இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பழையனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த பி.அமுதா (48), இவரது கணவர் பி.கே.பெருமாள் (58), அவர்களது மகள் பி.மகாலட்சுமி (26) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அமுதா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.