துபாய்: நீண்ட இடைவெளிக்கு பிறகு, துபாயில் உலகின் பிரமாண்டமான உலக கண்காட்சி அடுத்த மாத துவக்கத்தில் தொடங்குகிறது. சர்வதேச அளவிலான நாடுகள் தங்களின் கலை, கலாசாரம், தொழில், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், எதிர்கால சிந்தனைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், அதனை மேம்படுத்தவும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக கண்காட்சியில் பங்கேற்பார்கள். உலகின் முதல் எக்ஸ்போ 1851ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. கடந்த உலக கண்காட்சி, இத்தாலி மிலன் நகரில் நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான உலக கண்காட்சி எக்ஸ்போ 2020, துபாயில் நடைபெறுகிறது. துபாய் முதலீட்டு பூங்கா பகுதியில் 1,080 ஏக்கர் பரப்பளவில் ‘மனதை இணைத்தல்; எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற பெயரில் நடைபெற உள்ள இக்கண்காட்சி, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்கிறது. கண்காட்சியை ஒருமுறை பார்வையிட நபர் ஒருவருக்கு 95 திர்ஹாம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே, 6 மாதத்திற்கான பாஸ் பெறுவதற்கு 495 திர்ஹாம் செலுத்தினால் போதுமானது.
* ரூ.450 கோடியில் இந்திய அரங்கம்
இந்த உலக கண்காட்சி வளாகத்தில் ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது, 4 ஆயிரத்து 800 சதுரடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. திறன், வர்த்தகம், பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெறுகிறது. மகாத்மா காந்தியின் உருவமும் இடம் பெறுகிறது. அனைவரின் கவனத்தையும் இத் அரங்கம் ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர். இந்த உலக கண்காட்சி அரங்கில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதற்கென பிர்தவ்ஸ் என்ற இசை அரங்கத்தையும் உருவாகியுள்ளார். மேலும், பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.