சென்னை: சென்னை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அறிக்கை அளிக்க நில நிர்வாக துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நில பட்டா மாற்றம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடந்து வருகிறது.
சென்னையை அடுத்த ஜாமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமாக 1.79 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை கொண்டிதாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து 2019ல் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜ்குமார் என்பவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள், இந்நாள் கோட்டாட்சியர்களை ஆஜராக உத்தரவிட்டது.
அதன்படி ஆஜரான தற்போதைய கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உண்மை ஆவணங்களை தேடி அவை கிடைக்கவில்லை என்றும் தான் பட்டா மாற்றம் செய்து உத்தரவிட்ட போது ஆவணங்கள் இருந்ததாகவும், தற்போது தர்மபுரியில் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக உள்ள முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரும் குறிப்பிட்டனர். இதனையடுத்து ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் பட்டா மாற்றம் செய்ய தாசில்தாருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் வருவாய் கோட்டாட்சியர் எப்படி பட்டா மாற்றம் உத்தரவை பிறப்பித்தார் என்பது குறித்தும், தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை வருகின்ற 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.