காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான.ஆர்த்தி உத்தரவின்படி வட்டாட்சியர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் ஆங்காங்கே பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் பகுதியில் வட்டாட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.32,000 மதிப்பிலான 250 பித்தளை விளக்கு, 60 குங்குமச்சிமிழ் ஆகியவை கொண்டு சென்றார்.
அதேபோல் காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர், தனது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூ.10,500 மதிப்பிலான 300 சரிகை காட்டன் டவல்கள் கொண்டு சென்றார். மேற்கண்ட 2 கார்களையும் சோதனை செய்த அதிகாரிகள், அதில் இருந்த பெருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், காஞ்சிபுரம் அடுத் ஐயங்காரகுளம் பகுதியில் வட்டாட்சியர் வரதராஜன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் காஞ்சிபுரம் தேர்தல் அலுவலர் ஸ்ரீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.