×

மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை : மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில், வனப்பகுதியை ஆக்கிரமித்து, கவிதா செண்பகம் என்பவர், ரிசார்ட் கட்டுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள 16,250 ஹெக்டேர் வனப்பகுதி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வாதிட்டார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம். 16,000 ஹெக்டேர் அளவிற்கு வனப்பகுதி நிலம் ஆக்கிரமிப்பிலுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. வனப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையைத் தொடர தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Tags : Chennai High Court , உயர்நீதிமன்றம்
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...