திருமலை: ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்திய ரூ.9 ஆயிரம் கோடி ஹெராயினை குஜராத் துறைமுகத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜயவாடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஹசன் ஹூசைன் லிமிடெட் நிறுவனத்தின் கண்டெய்னர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சத்தியநாராயணபுரத்தில் உள்ள ஆஷி டிரேடிங் நிறுவன முகவரிக்கு முகத்துக்கு பயன்படுத்தும் டால்கம் பவுடர் இறக்குமதி செய்யும் கப்பலில் நேற்று குஜராத் துறைமுகத்துக்கு வந்தது.
இந்நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், போதை பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து சந்தேகத்தின் பேரில் கண்டெய்னரை திறந்து ஆய்வு செய்தனர். அப்போது, முகத்திற்கு பயன்படுத்தும் டால்கம் பவுடர் என்று கூறி, ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின்(போதைப்பொருள்) கடத்தி வந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று முதல் தீவிர சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.