சென்னை: சென்னை டிபிஐ வளாகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்த 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பள்ளிக் கல்வி ஆணையர் அறைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா செய்தனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் சின்னராசு கூறியதாவது: பட்டம் படித்து பிஎட் படித்தவர்கள் 57 வயது வரை ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர்கள் என்று இருந்த அரசாணையை மாற்றி இதர பிரிவினர் 40 வயதும், பிசி, எம்பிசி மற்றும் உள்ளவர்கள் 45 வயது வரையும்தான் பணிக்கு தகுதியுடையவர்கள் என்று அறிவித்தது. இப்போது கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் நீட்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால், முன்பு இருந்தபடியே ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு சின்னராசு தெரிவித்தார்.