தாம்பரம்: மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து, தாம்பரம் தொகுதி திமுக சார்பில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ், பெருங்களத்தூர் சேகர், எஸ்.ஜி.கருணாகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலர் இருந்த நிலை மாறி, தற்போது ஒரு பேரல் 72 டாலர் என குறைந்துள்ளது. எனவே, ரூ.40க்கு பெட்ரோல் கொடுக்கலாம். ஆனால் ரூ.100க்கு மேல் பெட்ரோல் விலை உள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்தி ஒன்றிய அரசு மக்களை சுரண்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டை பகுதியில் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா தலைமையில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் மாதவரத்தில் நடந்தது.
* ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமையில் நங்கநல்லூரில் நடந்தது.
ஆலந்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பகுதி செயலாளர் குணாளன் தலைமை வகித்தார். இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.பூபாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் ஆதம்பாக்கத்தில் நடந்தது.