சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக்கொண்டார். சரண்ஜித் சிங் பதவியேற்றுக்கொண்ட போது அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னாள் முதலமைச்சரான அமரீந்தர் சிங் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டார். இன்று முதலமைச்சர் மட்டுமே பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அடுத்து அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்பதை காங்கிரஸ் கட்சி பின்னர் முடிவு செய்து அதற்கான தகவல்கள் தெரிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் குறித்து எழுந்த சர்ச்சைகளை முடித்துவைக்கும் விதமாக நேற்று முழுவதும் நடைபெற்ற ஆலோசனையில் சரண்ஜித் சிங் முதல்வராக பதவியேற்பார் என முடிவு செய்யப்பட்டு இன்று பதவி பிரமாணம் நடந்துள்ளது. அடுத்த கட்டமாக அமைச்சரவையின் முழு விவரங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.