இந்த காளை மணப்பாறை மற்றும் வையம்பட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் நடக்கும் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி அனைத்திலும் பங்கேற்று வந்தது. இந்த காளை கோவில் காளை என்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் இதற்கு தனி மரியாதை கொடுப்பார்கள்.
இந்த காளை நேற்று முன்தினம் உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பதினெட்டு பட்டிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் வந்து இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து காளைக்கு இறுதிச் சடங்கு மனிதர்களுக்கு நடத்தப்படுவது போல நடத்தப்பட்டது. அப்போது, கூடியிருந்த பெண்கள் கதறி அழுதனர்.
பின்னர் இறந்த காளைக்கு வாரிசாக ஒரு கன்றுக்குட்டியை அழைத்து வந்து அதற்கான வழிபாடுகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இறந்த காளையை பாடைபோல் கட்டி இறுதி ஊர்வலம் தொடங்கியது. வீட்டில் இருந்து தாரை, தப்பட்டை, உருமி சத்தம் முழங்க காளையை தூக்கி வந்து மனிதர்களுக்கு நடத்தப்படுவது போலவே இறுதி சடங்கு செய்து புதைத்தனர்.