நெல்லை: நெல் லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே வழிபாட்டிற்கு திரண்டு வந்தனர். பெரிய கோயில்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பிற்காக அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து வெளியில் நின்று தரிசித்தனர்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் கருடசேவை விழா நடைபெறும். இதற்காக சிறப்பு வழிபாடு நடைபெறும். இரவில் பெருமாள் கருடவாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுவது வழக்கம். இதை தரிசிப்பதற்காக பக்தர்கள் காலை முதல் இரவு வரை அதிகளவில் பெருமாள் கோயில்களுக்கு வருவார்கள். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்களில் பக்தர்கள் பயணிப்பார்கள்.
தற்போது கொரோனா 2ம் அலை முடிவுக்கு வராத நிலையிலும், சில பகுதிகளில் அவ்வப்போது பரவல் அதிகரிப்பதாலும் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்ல தடை நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலையிலேயே பெருமாளை தரிசிக்க கோயில்களுக்கு படையெடுத்தனர். நெல்லை அடுத்துள்ள திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கில் உள்ள பெரிய கோயில்களில் உள்ளே சென்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. அதிகாலையில் கட்டளைதாரர்கள் நிகழ்ச்சி நடந்த போது பக்தர்கள் அதிகளவில் உள்ளே செல்ல முற்பட்டனர். கோ யில் நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதி மறுத்தது. இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கோயில் வெளியே நின்று தரிசித்தனர்.