×

நாமக்கல்லில் மாயமான பள்ளி மாணவி: சென்னை காதலனுடன் போலீசில் தஞ்சம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே நீட் தேர்வு எழுதி விட்டு மாயமான மாணவி, தனது பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொண்டு, தேனி மாவட்ட போலீசில் தஞ்சமடைந்தார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவரது மகள் சுவேதா (19). இவர் பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்தாண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நீட் பயிற்சி மையத்தில் நீட் தேர்வெழுத பயிற்சி பெற்றார்.

கடந்த வாரம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் உள்ள தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் வராததால் பெற்றோர், சுவேதாவின் தோழி வீட்டுக்கு தேடிச்சென்றனர். ஆனால் சுவேதா அங்கு வரவில்லை என அவரது தோழி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து நாமகிரிப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு, தேனி மாவட்ட போலீசார் தொடர்பு கொண்டு, சுவேதா தனது காதலனுடன் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: பிளஸ் 2 முடித்து விட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்த சுவேதாவுக்கு, சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (26) என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

டேனியல் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது டூவீலரில் நாமகிரிப்பேட்டைக்கு டேனியல் வந்துள்ளார். பின்னர், சுவேதாவை அழைத்துக்கொண்டு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிசிடிவி பதிவுகளை நாங்கள் ஆராய்ந்தபோது, சுவேதா துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு, வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது.

அவர்கள் பேளுக்குறிச்சி முருகன் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு, பின்னர் தேனி மாவட்டம் சென்று உத்தமபாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். இதனிடையே, சுவேதாவை போலீசார் தேடுவதை அறிந்து கொண்டதால், நேற்று  இருவரும் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். காதல் ஜோடியை அழைத்து வருவதற்கு தனிப்படை தேனி விரைந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

நீட் தேர்வு எழுதிய மாணவி தேர்வு பயத்தில் மாயமானதாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தனது பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chennai , Magical school student in Namakkal: Asylum in the police with her boyfriend in Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...