திருமலை: புராண கதையை மையப்படுத்தி தெலுங்கில் உருவாகும் ‘ஷகுந்தலம்’ என்ற படத்தில் நடித்துள்ள சமந்தா, இதன் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து, இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். அவருக்கும், கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சினிமாவில் நடிக்க மறுப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்த சமந்தா, அங்கு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று காலை திருப்பதி கோயிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசித்த சமந்தாவுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.
பிறகு கோயிலுக்கு வெளியே வந்த சமந்தாவை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். அப்போது ஒருவர், ‘நாக சைதன்யாவுடன் உங்களுக்கு கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறதே?’ என்று கேட்டார். இதனால் கடும் டென்ஷனான சமந்தா, ‘கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி எல்லாம் கேள்வி கேட்பதா?’ என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.