×

ஏற்காடு மலைப்பாதையில் விபத்து படப்பிடிப்பு வேன் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி

ஏற்காடு,: சென்னையில் இருந்து குறும்பட படப்பிடிப்பிற்காக வந்தபோது ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் சென்னையைச் சேர்ந்த பலர் முகாமிட்டு கடந்த சில நாட்களாக சீரியல்கள், குறும்படங்கள் என படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே பக்கோடா பாய்ண்ட் பகுதியில் குறும்படத்திற்காக படப்பிடிப்பு நடத்தினர். பின்னர், பெலாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக மாலை 5 மணியளவில் வேனில் புறப்பட்டுச் சென்றனர்.

வேனில், படக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வளைவான பகுதியில் சென்றபோது, எதிரே லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனைக்கண்ட வேன் டிரைவர் சங்கர், மெதுவாக சாலையோரம் திருப்பினார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி, அருகில் உள்ள 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த பாண்டியன் (41), தேனியைச் சேர்ந்த சஞ்சய்(33) ஆகியோர் உயிரிழந்தனர். கௌரிசங்கர் மற்றும் பேச்சியப்பன் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலின்பேரில் ஏற்காடு போலீசார் சென்று உடல்களை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காயம் அடைந்தவர்களையும் சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Yercaud accident , Yercaud hill station, accident, shooting van
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...