×

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இழப்பீடு நில உரிமையாளர்கள் வழக்கை 8 வாரத்தில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

புதுடெல்லி: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டுள்ள வழக்கை, 8 வாரங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முதலாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரயில் நிலையங்கள், பாதைகள் அமைப்பதற்காக, தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கான இழப்பீட்டு தொகையும் நில உரிமையாளர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகளால் கொடுக்கப்பட்டது. ஆனால், சில நில உரிமையாளர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில், நில உரிமையாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக எங்களிடம் இருந்து 7.68 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. எங்களின் நிலத்திற்கு மட்டும் குறைவாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால், அந்த தொகையை அதிகரித்து வழங்கவும். ் கடந்த 10 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும்படியும் உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குகளை அடுத்த 8 வாரங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Metro Rail ,Chennai High Court , Metro Rail, Land Owners, Chennai High Court, Order
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...