திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பத்தில் 200 கோடி செலவில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்தும் வகையிலும், 60 ஆயிரம் டன் அளவிற்கு மீன்கள் கையாளும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், ஓய்வறை, ரேடியோ டவர், தங்கும் இடம், 819 மீட்டருக்கு சுற்றுச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் துறைமுக பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். இந்த துறைமுகத்தில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்,’ என்றார்.