செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மறு புனரமைத்து வளாகத்தில் புதிய சாமி சிலைகள் அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 13ம் தேதி அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி, 14ம் தேதி நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாக பூஜை, கும்ப அலங்காரம், 15ம் தேதி அக்கிகார்யம், மூலமந்திர ஹோமங்கள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன.
இந்நிலையில், நேற்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, அனைத்து விமானங்கள் சமகால மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து வெக்காளியம்மன் மற்றும் மூர்த்திகளுக்கு சமகால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுந்தரவரதன் செய்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.