×

கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: ஆகஸ்ட் 31க்கு முன் யார்? யார்? கொரோனாவால் இறந்தார்கள் என ஆய்வு செய்து இறப்பு சான்றிதழ்களை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் நிகழும்போது இறப்பு சான்றிதழில் ‘கொரோனாவால் மரணம்’ என குறிப்பிடாமல் இணைநோய்களால் மரணம் என்று குறிப்பிடுவதாக குற்றம்சாட்டி ஸ்ரீராஜலட்சுமி என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும், இதனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை பெறமுடியவில்லை என்றும், கொரோனாவால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : கொரோனா, இறப்பு ,சான்றிதழ்
× RELATED அமைதியாக நடந்து முடிந்தது மக்களவைத்...