விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்து பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளார். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்களை இயக்கும் போது இயரிக் எய்டு கருவி மூலம் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியை கேட்கின்றனர். ஆனால் தலைக்கவசம் அணியும் போது அந்த ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சிரமத்தை போக்கும் வகையில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் 3 பேர் புதிய சேஃப்டி எய்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மதுமிதா, ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய மூன்று மாணவிகள் கண்டுபிடித்துள்ள இந்த கருவி வாகனத்தின் பின்பக்கத்தில் சென்சார் கருவியுடன் பொருத்தப்படுகிறது. பின்வரும் வாகனங்களின் அதிர்வை சென்சார் கருவி வாகன ஓட்டிக்கு கடத்துகிறது. ஒன்றிய அரசின் அடல் டிங்கரிங் திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் இந்த சேஃப்டி எய்டு கருவியை 3 மாணவிகளும் கண்டுபிடித்துள்ளனர். இதன் தயாரிப்பு செலவு 1,700 என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.