×

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நடிகை மனு அளித்திருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் கடந்த ஜூன் மாதம் பரபரப்பான புகார் ஒன்றினை அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதுமட்டுமல்லாது கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி பெங்களூரில் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது இது தொடர்பான வழக்கு என்பது அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆதாரங்களை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக கட்டாய கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பொதுவாக கைது செய்யப்பட்ட 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். செப்டம்பர் 18ம் தேதியுடன் மணிகண்டன் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் முடியும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், மணிகண்டன் குறித்த பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதில், சென்னையில் பல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மணிகண்டனுக்கு எதிரான வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கட்டாய கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் மணிகண்டன், மருத்துவர் அருணின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நடிகை மனு அளித்துள்ளார்.


Tags : AIADMK ,minister ,Manikandan , Manikandan, sex, crime
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...