சென்னை: டெல்லி போராட்டம் 100 விவசாயிகள் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும் என்று காட்பாடியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைக்கும் ‘நீட்’ தேர்வை தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கி இருப்பதாகவும், நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, ‘நீட்’ தேர்வை முழுமையாக நீக்கும் வரை சட்டப் போராட்டம் நீடிக்கும். உயிர் காக்கும் மருத்துவப் படிப்புக்காக, உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் ‘நீட்’ தேர்வை விரட்டுவோம்,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காட்பாடியில் நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லி போராட்டம் 100 விவசாயிகள் இறந்தும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு மாணவர்கள் இறப்புக்கா செவிசாய்க்கும். நீட் தேர்வு என்னும் கொடிய அரக்கனை ஒன்றிய அரசு ஏவி உள்ளது. நீட் தேர்வை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.