வாஷிங்டன் : அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட உலகளவில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.டைம் இதழ் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் செல்வாக்கு உள்ள 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான பட்டியலில் மோடி, மம்தா பேனர்ஜி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், பிரிட்டன் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன்,அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி குறித்த விவர குறிப்பை சிஎன்என் பத்திரிகையாளர் பரீத் ஜஹரியா எழுதி உள்ளார்.இதில் சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு மோடி, இந்திய அரசியலில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடி இந்தியாவை மதச்சார்பற்ற நாட்டில் இருந்து இந்துத்துவாவை நோக்கி நகர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மோடி சிறுபான்மையினர்களான முஸ்லீம்களின் உரிமைகளை வேரறுப்பதாகவும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்து அச்சுறுத்துவதாகவும் விமர்சித்து இருக்கிறார்.
மம்தா பேனர்ஜி குறித்த விவரக் குறிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவர் வழிநடத்தவில்லை. அவரே ஒரு கட்சி போல செயல்படுவதாகவும் கள போராட்டக்காரர்குரிய உத்வேகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதர் பூனாவாலாவும் இடம் பிடித்துள்ளார்.