×

நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுமுறை காலங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால்தான் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளன.

சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நச்சு புகை பரவுகிறது. இயற்கையின் அழகையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாபயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். விடுமுறை காலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Nilgiris ,Tamil Nadu government , Strict restrictions on holidays to protect environment in Nilgiris: HC orders govt
× RELATED குன்னூர் அருகே சிறுத்தை, கரடி வீடு...