×

பாமகவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி : அதிமுக, அமமுக கூட்டணியை முறித்தது!!

சென்னை : தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அமமுக கூட்டணியில் இருந்தும் விலகி தேமுதிக தனித்துப் தேர்தலை சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் நாளை, நாளை மறுநாள் விருப்ப மனு அளிக்கலாம் என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள் காலை 10.00 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

கட்டணத் தொகை:
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்            -     4,000/-
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்            -     2,000/-

இவ்வாறு தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.



Tags : Bamaka ,Extreme ,Amaṇa Alliance , தேமுதிக தலைமை
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்