×

லோக் அதாலத்தில் 1374 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.23.66 கோடி இழப்பீடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 1,374 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ.23.66 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், லோக் அதாலத் மாதம் தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மேவிஸ்தீபிகா சுந்தரவதனா தலைமை வகித்து, லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.மீனாட்சி முன்னிலை வகித்தார்.

இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 4,395 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 1374 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.23 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரத்து 489 இழப்பீடாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், தாம்பரம், திருக்கழுக்குன்றம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Lok Adalat , Settlement of 1374 cases in Lok Adalat: Rs 23.66 crore compensation
× RELATED சிவகாசியில் லோக் அதாலத் மூலம் 694 வழக்குகளுக்கு தீர்வு