சென்னை: தமிழக ஆளுநராக 4 ஆண்டுகள் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து விடைபெற்று சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பு விழா நடந்தது. தமிழகத்தின் 14வது ஆளுநராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார். இவர், தமிழக ஆளுநராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதாக கடந்த வாரம் ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பு வகிக்க பன்வாரிலால் புரோகித் நேற்று காலை 8.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் சண்டிகருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக பழைய விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பன்வாரிலால் புரோகித்திற்கு வழியனுப்பு விழா நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அத்துடன் தமிழகத்தை விட்டு விடை பெற்று செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பு விழா நடந்தது. முன்னதாக, ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உடனிருந்தனர். தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) பதவியேற்கிறார். இதற்காக வருகிற 16ம் தேதி இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வருகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.