உடுமலை: உடுமலை அடுத்த கல்லாபுரம் பகுதி அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், கல்லாபுரம், கொழுமம் வழியாக தாராபுரம் செல்கிறது. அணையில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளதால், உபரி நீர் ஆற்று வழியாக வெளியேற்றப்படுகிறது. அமராவதி ஆற்றில் முதலைகள் அதிகளவில் உள்ளன. அணையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கல்லாபுரம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், முதலைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என கல்லாபுரம் ஊராட்சி மற்றும் அமராவதி வனச்சரகம் சார்பில் எச்சரிக்கை போர்டு ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை பலகையில், அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றுக்கு செல்லவோ கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.