சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் 54 ஆண்டாக ஆட்சி பீடத்தில் இல்லை. காரணம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை சரியில்லை. தமிழக காங்கிரசாரின் அணுகுமுறையும் சரியில்லை. கட்சியில் உழைப்பவர்களுக்கு நியாயமான பதவியை வழங்குவதில்லை. தகுதி இல்லாதவர்கள் முன் வரிசையில் அமரக்கூடிய நிலைதான் காங்கிரசில் உள்ளது. கடந்த தேர்தல்களில் தமாகா தோல்வியை சந்தித்தாலும், வரக்கூடிய காலங்களில் வெற்றியை பெறும். வெற்றி தோல்வி என்பது எந்த அரசியல் கட்சிக்கும் நிரந்தரமானதல்ல.
தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சி என்று பட்டியலிட்டால் தமாகா முதலிடத்தில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் மனித உரிமை பிரிவு மாநில செயலாளர் புத்தூர் கார்த்திக் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரசார் 100க்கும் மேற்பட்டோருடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தார். இதில் மாநில செயலாளர் விடியல் சேகர், ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்ட தலைவர்கள், சைதை மனோகரன், முனவர் பாஷா, கோவிந்தசாமி, இளைஞரணி செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.