காட்டுமன்னார்கோவில்,: திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் தாலுகா வடக்கு தேனீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இதற்கிடையே திருச்சி பகுதியில் சூரியமூர்த்தி வாடகை வீட்டில் வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திருச்சி மாவட்டத்திற்கு சென்று சிறுமி மற்றும் சூரியமூர்த்தியை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து சூரியமூர்த்தியிடம் விசாரணை செய்ததில், அவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து ஆனதும் தெரியவந்தது. சூரியமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.