சென்னை: மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட பணி என்பது சுரங்க பாதையாக மாதவரம் வரை அமைக்கப்படுகிறது. இதனால் முதற்கட்டமாக சென்னை ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து விருகம்பாக்கம் 80 அடி சாலை வரை சுரங்கப்பாதை பணிகள் தற்போது தொடங்கியுள்ளனர். இதனால் இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு கோடம்பாக்கம் ஆற்காடு சாலை முதல் 80 அடி சாலை வரை இந்த போக்குவரத்து மாற்றம் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. அதில் நெரிசல் ஏற்படும் பகுதிகளில் மாற்றம் செய்து இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
போரூர், கோயம்பேட்டில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் வழக்கம் போல் அந்த திசையில் கோடம்பாக்கத்தை நோக்கி செல்லலாம். ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கோயம்பேடு செல்வதாக இருந்தாலோ அல்லது போரூர், பூந்தமல்லி செல்வதாக இருந்தாலும், அசோக் நகர், வடபழனி நோக்கி செல்வதாக இருந்தாலும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து இடதுபுறமாக அம்பேத்கர் சாலையில் திரும்பி அசோக் நகர் காவல் நிலையத்தில் வலது புறம் திரும்பி அவர்கள் 100 அடி சாலையை சென்றடையலாம். அதேபோல வடபழனி சாலிகிராமம் செல்லக்கூடிய வாகனங்களும் 100 அடி சாலையில் இருந்து நேரடியாக கேகே நகர் வழியாக ராஜமன்னார் சாலை வழியாக தான் அந்த பகுதிக்கு சென்றடைய முடியும்.
கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி வழியாக 80 அடி சாலை வரை சுரங்கப்பாதை பணிகள் செய்து வருவதால் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக எல் அன்ட் டி நிறுவனம் சுரங்கம் தோண்டக்கூடிய பணிகளை செய்து வருகின்றனர். எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த போக்குவரத்து மாற்றம் செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.