×

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்: அனைத்து அரசு கட்டிடங்களிலும் அடுத்தாண்டுக்குள் மாற்றுத்திறனாளிகள் அணுக வசதிகள் செய்யப்படும்

சென்னை: அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.  தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவது உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய்தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளது. 21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறானாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கபட்டுள்ளன. அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டுவருவதற்கு முன்புள்ள 45 சதவீத கட்டிடங்களை பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவண்ணம் வசதிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின் படி 2022 ஜூன் 15ம் தேதிக்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துகுமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும் அடுத்த ஆண்டிற்குள்  மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் மாற்றுதிறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும். தவறினால் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Government of Tamil Nadu ,Chennai , High Court, Government of Tamil Nadu, Persons with Disabilities
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...