×

தனியார் பொறியியல் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: பெற்றோர் கண் எதிரே நடந்த சோகம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி, தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தங்ககுமார். சிமென்ட் தொழிற்சாலையில், மேலாளராக உள்ளார். இவரது மகள் அபிதா (19). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் அபிதா, அரியலூரில் இருந்தார். அங்கிருந்து ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். சமீபத்தில் அரசு உத்தரவுபடி 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவி அபிதா, கல்லூரிக்கு வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.

மாணவி அபிதா கடந்த சில நாட்களாக  மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிக்கு தகுந்த ஆலோசனைகளை அளித்தனர். ஆனால் அபிதா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததோடு, படிப்பிலும் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும், படிக்க விரும்பவில்லை என பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர், சமரசம் பெய்ததால், கல்லூரியில் படிக்க வந்ததாக கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம், அபிதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அபிதாவின் பெற்றோர், நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் வந்தனர். மதியம் அவர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசினர். அப்போது, ‘‘அபிதா, மன அழுத்தத்தில் இருக்கிறார். நாங்கள் பலமுறை கவுன்சிலிங் கொடுத்தும் சரியாகவில்லை. எனவே நீங்கள் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். மன அழுத்தம் நீங்கி, அவர் முழுமையாக குணமடைந்த பின்னர், மீண்டும் கல்லூரிக்கு அனுப்புங்கள்’’ என்று கூறியுள்ளனர். அதற்கு, மாணவியின் பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து, மகளை ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

அப்போது அபிதா, பெற்றோரை இங்கேயே இருங்கள். நான் மேலே சென்று அறையில் உள்ள தனது உடமைகளை எடுத்து வருகிறேன்’’ என கூறிவிட்டு, 5வது மாடிக்கு  சென்றார். அங்கு சென்ற மாணவி, மாடியில் இருந்து கிழே குதித்தார். இதை பார்த்த பெற்றோரும், கல்லூரி ஊழியர்களும் பதறியடித்து கொண்டு மாணவியை மீட்டு, அருகில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  சிகிச்சை பலனின்றி மாணவி அபிதா பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மன அழுத்தத்துக்கு என்ன காரணம், கல்லூரியில் ஏதாவது பிரச்னையா, வீட்டிலோ, நண்பர்கள் வட்டாரத்தில் ஏதாவது பிரச்னையா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : College student, suicide
× RELATED யானை தாக்கி விவசாயி பலி