×

20 நாட்களாக முழு கொள்ளளவில் அமராவதி அணை நீர்மட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை : 20 நாட்களுக்கும் மேலாக அமராவதி அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியும், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகிறது.

தற்போது பருவமழையால் நீர்வரத்து அதிகரித்ததால், இந்த ஆண்டில் 3-வது முறையாக அணையில் இருந்து கடந்த 23-ம்தேதி உபரிநீர் திறக்கப்பட்டது. 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நேற்று காலை நீர்மட்டம் 88.52 அடியாக இருந்தது. அணைக்கு 336 கனஅடி நீர்வரத்து உள்ளது. 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இருந்தாலும் தொடர்ந்து அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், கடந்த ஜூலை  மாதம் துவக்கத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியது. ஆகஸ்ட்  மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து மழை இல்லாத போது, விவசாயிகள் பலர் தங்கள்  விளை நிலங்களை உழுது காய்கறிகளையும், மானாவாரி பயிர்களையும் சாகுபடி செய்ய தொடங்கினர்.

 இம்மாதம் துவக்கத்திலிருந்து  இரவு நேரத்தில் அடிக்கடி சாரல் மழை பெய்தது. சில நாட்கள் கனமழை  பெய்தது. இதில் நேற்று முன்தினம் இரவு பெய்ய துவங்கிய மழை, விடிய  விடிய கொட்டியது. இதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு  முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக, டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம்  பகுதியில் 45 மி.மீட்டர் மழை பதிவாகியது.

இதனால், மொத்தம் 72 அடி  கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து  விநாடிக்கு 3,500 ஆக அதிகரித்தது. தற்போது நீர்மட்டம் 71.30 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அதே அளவு தண்ணீர் உபரியாக  வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பெய்து வரும்  மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Amravati Dam , Amaravathi Dam, Farmers happy, Full capacity
× RELATED அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!