விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 2,464 பேர் நீட் தேர்வு எழுதினர். 102 பேர் ஆப்சென்ட் ஆகினர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் மகரிஷி வித்யாலயா மையத்தில் 240, விருதுநகர் சிதம்பர நாடார் ஆங்கில பள்ளியில் 300, விருதுநகர் கேவிஎஸ் ஆங்கில பள்ளியில் 360, ஆர்.ஆர்.நகர் ராம்கோ வித்யாலயாவில் 360, திருத்தங்கல் ஏஏஏ இன்டர்நேசனல் பள்ளியில் 300, அருப்புக்கோட்டை மினர்வா பள்ளியில் 226 பேர், சாத்தூர் ஆவல்நத்தம் ஸ்ரீஹரா வித்யா மந்திர் பள்ளியில் 240, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு மார்டன் பள்ளியில் 240, அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளியில் 300 மாணவ, மாணவியர் என 2566 பேர் நீட் தேர்விற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
மாவட்டத்தில் 9 மையங்களிலும் மாணவ, மாணவியர் கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வெயில் வாட்டி எடுத்த நிலையில் நீட் நடந்த பள்ளிகளுக்கு வெளிப்பகுதியில் சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவியர் கொளுத்தும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர். கழுத்து, காதுகளில் மாட்டியிருந்த செயின், கம்மல், கால் கொலுசுகள் கழட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
தலைமுடி பின்னல்கள் அவிழ்க்கப்பட்டு, கிளிப்புகள் அகற்றப்பட்டு, கைகளில் கட்டியிருந்த கயிறுகள் வெட்டி அகற்றப்பட்டு, செருப்புகள் கழட்டி வெளியே போட வைத்து, துப்பட்டாக்களை கழட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் சென்ற மாணவ, மாணவியர் அனுமதி சீட்டு, ஒரு பாஸ்போட் புகைப்படம், குடிநீர் பாட்டில், சானிடைசர் பாட்டில்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயில் சோதனையை தொடர்ந்து, உள்பகுதியில் நடந்த இரண்டாம் கட்ட சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர் தங்க இடமின்றி கொளுத்தி வெயிலில் மரங்கள், அரசு அலுவலக வெளிப்பகுதிகளில் அமர்ந்து தேர்வு முடித்து மாலை 5.15 மணிக்கு மேல் குழந்தைகளை அழைத்து சென்றனர்.
தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததால் தகவல் பறிமாற்றத்தில் சிக்கல் இருந்தது. 9 மையங்களில் தேர்வு எழுத அழைக்கப்பட்ட 2,566 பேரில் 102 பேர் ஆப்சென்ட் ஆகினர். 2464 பேர் தேர்வு தேர்வெழுதினர். வழக்கம் போல் நீட் தேர்வு கடும் சோதனைகளை சந்தித்த பிறகு தேர்வெழுதினர்.