குன்றத்தூர்: உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பெறப்பட்ட மனுக்களில் சுமார் 211 மனுக்கள் மீது குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இலவச வீட்டு மனை பட்டா, இருளர் இருப்பிடச்சான்று, நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டைகள் வழங்கல் என 211 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்தார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 211 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மத்திய அரசிடம் போராடி தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பெற்று வரும் நிலையில், அதனை பொதுமக்கள் போட்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், நோய் எவ்வாறு கட்டுக்குள் வரும். நாடு எப்படி முன்னேறும். எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். இதனால் மனம் மகிழ்ந்த நரிக்குறவர்கள், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மணியை மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சருக்கு கழுத்தில் அணிவித்து அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நரிக்குறவர்கள் அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.