திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு அடுத்த காவூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஒரு காரில், கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற கார் கரும்புகையுடன் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதைப்பார்த்த காரில் வந்தவர்கள் அவசர அவசரமாக காரிலிருந்து கீழே இறங்கி விட்டனர். பின்னர், சற்று நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது. கார் எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் கார் முழுதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் அவசரமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து சம்பந்தமாக திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.