திருப்போரூர்: அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டிகள் இன்டெல்லி சென்ஸ் என்ற பெயரில் தில்லியில் நடைபெற்றன. இதில் இந்தியா முழுவதும் இருந்து 85 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தின் சார்பில் பேராசிரியர் வேல்மதி, மாணவர்கள் வெங்கட்ராகவன், விஸ்வத்குமார், யோகேஷ்வர், தருண் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் சிறப்பான தீர்வு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையும், தங்களின் கண்டு பிடிப்பையும் காட்சிப்படுத்தினர். இந்த கண்டுபிடிப்புக்கு விஸ்வகர்மா விருது 2020 வழங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பேராசிரியர் மற்றும் மாணவர்களை வி.ஐ.டி. குழுமத் தலைவரும் வேந்தருமான விஸ்வநாதன் பாராட்டினார்.