ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரின் ஹமாம்மார்கூட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததோடு, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த நாடோடி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 80 வயது முதியவரை தேடும் பணி நடந்து வருகிறது.