கொடைக்கானல்: தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 50 இடங்களில் முகாம் நடந்தது. கொடைக்கானல் அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை ஆர்டிஓ முருகேசன் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இன்று (செப். 13) முதல் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொடைக்கானல் அருகே உள்ள வாழைகிரி, வடகரைபாறை, மூளைஆறு, வலாங்குளம், கருகுதடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் கொடைக்கானல் மருத்துவத் துறை சார்பில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. ஒன்றிய பகுதிகளில் 72 சதவீத முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.