சென்னை: நீட் தேர்விற்கு அச்சப்பட்டு, மாணவர்கள் தற்கொலை முடிவுகளை எடுக்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் 2வது மகன் தனுஷ், ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடையாத நிலையில் இன்று நடைபெறுகின்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்தமுறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றச் செய்தி அறிந்து மிகுந்த கவலையும், மனவருத்தமும் அடைந்துள்ளேன். மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.