×

வேலூரில் 8 இடங்களில் அமைக்கப்படுகிறது; காற்று மாசு, மழை அளவு, அவசர தேவை தொடர்புடன் அதிநவீன கண்காணிப்பு கோபுரம் அமைப்பு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தீவிரம்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 8 இடங்களில் காற்று மாசு, மழை அளவு, அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளும் வசதியுடன் அதிநவீன கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மாநகரில் காட்பாடி ரயில் நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அரசினர் முஸ்லிம் பள்ளி ரவுண்டானா, சத்துவாச்சாரி உள்ளிட்ட 8 இடங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட் போல்’ அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் அரசினர் முஸ்லிம் பள்ளி ரவுண்டானா அருகே மட்டும் ஸ்மார்ட்போல் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இதன்மூலம், அவசர கால உதவி தேவைப்படும் மக்கள் எளிதாக தகவல் அளிக்க முடியும். அதற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் போலில் கைக்கு எட்டும் தூரத்தில் மொபைல் போனில் உள்ளது போல் பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தி பிரச்னையை தெரிவித்தால், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரூமுக்கு தகவல் சென்றடையும். அங்கிருந்து உங்களின் அவசர தேவைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதோடு ஸ்மார்ட் போல் பகுதியில் வாகன போக்குவரத்து கண்காணிக்கவும், குற்றச்செயல்கள் தடுக்கவும் பிரத்யேகமான 180 டிகிரி சுழல் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 ஸ்பீக்கர்கள், 4 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்களின் பதிவெண்களை தெளிவாக பார்க்க முடியும். மேலும், மழையின்போது அந்த பகுதியில் எந்த அளவுக்கு மழை பெய்தது என்ற விவரம் அறிக்கை சார்ந்த விவரங்களையும்,  அந்த பகுதியில் எந்தளவுக்கு காற்று மாசடைகிறது, என்ற விவரங்களையும் துல்லியுமாக கண்டறிய முடியும். அதற்கான அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளும், இந்த ஸ்மார்ட்போலில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் போல் மற்ற பகுதிகளிலும் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், மாநகராட்சி கன்ட்ரோல் ரூமிலிருந்து ஆக்டிவேட் செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் போல்கள் குற்றச்செயல்களை தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vellore , Is set at 8 locations in Vellore; Sophisticated watchtower system for air pollution, rainfall, and emergency contact: Intensity in the Smart City project
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...