சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் கூட தடுப்பூசி போடவில்லை. மேலும் இணைநோயினால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லை என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளதாக டீன் தேரணிராஜன் கூறினார். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலையில் மக்களை பாதுகாக்க தடுப்பூசி தான் ஒரே வழி என்பதால் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று வரை முதல் தவணை கோவிஷீல்டு 22,93,841 பேருக்கும், கோவாக்சின் 6,87,267 பேருக்கும், இரண்டாவது டோஸ் 9,49,293 பேருக்கும், கோவாக்சின் 4,40,908 பேருக்கும், மொத்தம் கோவிஷீல்டு 32,43,134 பேருக்கும், கோவாக்சின் 11,28,175 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி 43,71,309 பேர் இதுவரை முதல் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி ெசலுத்தியுள்ளனர். மேலும், இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் மட்டுமே முழுமையான கோவிட் தொற்றை தடுக்க முடியும் என்ற நிலையில் சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 1,600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக 970 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 170 பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதாக கூறியுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அதை விட மிகக்குறைவு என்று அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 72 கொரோனா நோயாளிகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் யாரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறுகையில், ‘ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிகிச்சை மேற்ெகாள்ளப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவமனையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 72 பேரில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 நபரிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்தவில்லை என்ற வருத்தம் அளிக்கக் கூடிய தகவல் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் சாதாரண வார்டுகளில் இணைநோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்திய 17 பேரிடம் ஆய்வு செய்ததில் ஆக்சிஜன் தேவைப்படாமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசிகள்தான் தொற்றில் இருந்து பாதுகாப்பதுடன், உயிரை காக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரிகிறது. எனவே பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.