×

கொரோனாவால் தவிக்கும் இளசுகள்: ஆன்லைனில் பதிவு திருமணம் கேரளா, டெல்லியில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம்,  கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் தன்யா மார்ட்டின். இவருக்கும் அதே பகுதியை  சேர்ந்த ஜீபன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது. ஜீபன் குமார் உக்ரைனில் வேலை பார்த்து வருகிறார்.  கொரோனா காரணமாக அவரால் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து  தன்யா மார்ட்டின், ஆன்லைனில் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் பதிவு  திருமணம் செய்ய அனுமதி கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்  செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், கவுசர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்  விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் ஆன் லைன் மூலம் பதிவு திருமணம்  நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தன்யா மார்டின் திருமணம்  விரைவில் ஆன்லைன் மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்  திருவனந்தபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும்போது, அதே  நேரத்தில் மணமகன் ஜீபன்குமார் காணொளியில் கலந்து கொள்வார் என்பது  குறிப்பிடத்தக்கது. இதே போல, அமெரிக்காவில் உள்ள இந்திய தம்பதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தங்களின் திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே திருமணத்தை பதிவு செய்து கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Tags : Kerala, Delhi , Corona, registered marriage
× RELATED மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு கேரளா,...