கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிஜம் வனப்பகுதியை உடனே திறந்துவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதையடுத்து மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் திறக்கப்பட்டன. பயணிகளும் திறக்கப்பட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் சுற்றுலா பகுதி பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் ஏரிப்பகுதி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூலித்து வந்தனர். இருப்பினும் தற்போது பல மாதங்களாக இந்த பகுதி திறக்கப்படாமல் உள்ளது. எனவே, பேரிஜம் ஏரி பகுதியை வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விட வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.