சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வீராணம் ஏரிக்கரை மேல் செல்லும் சாலையாகவும் உள்ளது. இது பரபரப்பான போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் இரண்டு பகுதிகளிலும் புளிய மரம், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இதனிடையே இந்த சாலையில் வெய்யலூர், வாழைக்கொல்லை பகுதியில் சாலையோரம் உள்ள பழமையான பட்டுப்போன புளிய மரம் உள்ளது. இது அகற்றப்படாததால் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.
மழைக் காலத்திற்குள்ளாவது இந்த மரத்தை அகற்ற வேண்டும். இல்லை எனில் இது எதிர்பாராமல் சாலையில் முறிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபோல் சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் சாலையில் கீரப்பாளையம் பகுதியிலுள்ள பட்டுப்போன மரத்தையும், முறிந்து விழும் நிலையில் உள்ள பழமையான மரத்தையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.