×

பாரதியாரின் நினைவு நாளான செப்.11 இனி ஆண்டுதோறும் மகாகவி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டை குறிப்பிட்டு காட்டினேன்.  நாட்டு விடுதலைக்காக போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

கழக அரசு அமைந்து, கலைஞர் முதலமைச்சரானபோது எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். 1973ல் பாரதியார் இல்லத்தை வரலாற்று சின்னமாக அறிவித்து முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவை போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

1.பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்‌.
2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
3.பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ.தூரன், ரா.அ. பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய.மணிகண்டனுக்கும், தலா ரூ.3 லட்சமும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.
4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
5. பாரதியின் கையெழுத்து பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை  வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களை தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரை பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.
8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.
9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.
10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
11. உத்தரப்பிரதேச மாநிலம் ‌காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
12. பாரதியார் படைப்புகளை குறும்படம்‌ மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகள் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.
14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதார பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா’ என பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Bharathiyar Memorial Day ,Mahakavi Day ,Chief Minister ,MK Stalin , Bharathiyar Memorial Day, Mahakavi Day, Chief Minister MK Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...