நொய்டா: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இதனால், இந்த இடத்தை இந்துக்கள் புண்ணிய தலமாக கருதி வழிபடுகின்றனர். மதுராவில் இறைச்சிகள், மதுவகைகளை விற்பதற்கு இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தடை விதித்தார். இந்நிலையில், கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் இளமை காலத்துடன் தொடர்புடைய பிருந்தாவனம் - மதுராவில் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இறைச்சிகள், மதுவகைகளை விற்பதற்கு முதல்வர் யோகி நேற்று அதிரடியாக தடை உத்தரவிட்டார்.
இந்த பகுதிகளில் இறைச்சி மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வேறு தொழில்களை அமைப்பதற்காக ஏற்பாடுகளை செய்யும்படி, அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த பகுதி முழுவதும் புண்ணிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 கிமீ சுற்றளவில் 22 நகராட்சி வார்டுகள் அமைந்துள்ளன.‘கிருஷ்ண ஜென்ம பூமி’ டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் அமைந்த மதுராவை சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களும் இணைந்து ‘கிருஷ்ண ஜென்ம பூமி’ அல்லது ‘விரஜ பூமி’ என்று அழைக்கப்படுகிறது.