மதுரை: போலீசாரின் குறைகேட்டு, நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை காவலர் மாசிலாமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடக்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
3 ஷிப்ட்டில் பணிபுரிய அனுமதி தர வேண்டும் என உத்தரவிட்டனர். கருணை தொகை மற்றும் உதவி தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும். போலீசாருக்கு குறைந்தபட்சம் 10% கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். காவல்துறையினரின் மகத்தான பணியை வேறு எந்த பணியுடனும் ஒப்பிட முடியாது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் காவல்துறையினர் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். காவல்துறையினரின் மகத்தான பணியை வேறு எந்த பணியுடனும் ஒப்பிட முடியாது. விடுமுறையின்றி 24 மணி நேரமும் பணிபுரிவதால் தான் சில நேரங்களில் போலீசார் கோபமடைகின்றனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும். போலீசாரின் குறை கேட்டு, நிவர்த்திசெய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும். 3 மாதத்தில் ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.