சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி 1வது வார்டு வீரம்மாள் கோயில் தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தை போகாரி ஆசாரி தெரு, கொல்லர் ஆசாரி தெரு, அங்கணன் ஆசாரி தெரு, பெரியார் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுகாதார வளாகத்தில் தண்ணீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறு முறையாக பராமரிக்காததாலும், ஆழம் அதிகம் இல்லாததாலும் முறையான தண்ணீர் வசதி இல்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தை பராமரிப்பவர் பொதுமக்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ.2, 3 வீதம் வசூல் செய்து அதில் வரும் பணத்தை வைத்து தண்ணீரை டிராக்டர் மூலம் விலைக்கு வாங்கி சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டு வருகிறார். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை செயல்படாததால், அவர்கள் அருகேயுள்ள ஓடை பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம் வீரம்மாள் கோயில் தெரு சுகாதார வளாகத்தில் முறையாக தண்ணீர் வசதி செய்து கொடுப்பதுடன், இங்குள்ள ஆழ்துளை கிணற்றையும் ஆழப்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.